

பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மக்களவையில் இன்று அரிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.
மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா உள்ளார். இவர் இல்லாத நேரத்தில் சபாநாயகர் குழுவில் உள்ள மற்ற எம்.பி.க்கள். சபாநாயகர் இருக்கையில் அமர்வார்கள். அந்த வகையில் இன்று ஓம் பிர்லா இல்லாத நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து, அவையை நடத்தினார்.
கேள்வி நேரத்தின்போது சபாநாயகராக செயல்பட்ட தென்னெட்டி நான் ஒரு கேள்வி எழுப்புகிறேன். அவையின் அனுமதியுடன் அந்த கேள்வியை எழுப்புகிறேன் என்றார். அதன்படி கடற்பகுதியிலும், கடற்கரையோரங்களிலும் அரியவகை தாதுப்பொருட்கள் கண்டெடுக்கப்படும்போது, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், வளங்களையும் பயன்படுத்த வேண்டும். இரண்டையும் எப்படி கையாள்வீர்கள்? என்று அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
சபாநாயர்கள் இருக்கையில் இருந்து கேள்வி எழுப்பப்படுவதில்லை. அவையை மட்டுமே நடத்துவார்கள். தற்போது அரிதாக இருக்கையில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.