

புதுடெல்லி:
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
வளைகுடா நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால், பல்வேறு நாடுகளின் விமானப் போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விமானப் போக்குவரத்தின் நிலைமை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், போர் தொடங்கியது முதல் இதுவரை 4.26 லட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்பி வந்துள்ளதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அசீம் ஆர்.மகாஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
போர் காலத்தில் வளைகுடா நாடுகளில் இருந்து இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான 2,149 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளின் வழியாக ஈரானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம். இதுவரை 717 மாணவர்கள் உள்பட 1,043 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் ஜோர்டான் வழியாக இந்தியா வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குவைத், பக்ரைன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் நிலவும் விமானக் கட்டுப்பாடுகளால் சவுதி அரேபியா வழியாக இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள உதவிகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 4.26 லட்சம் பேர் இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.