தமிழ்நாட்டில் பா.ஜனதா காலூன்ற வாய்ப்பு: முரளிதரராவ் பேட்டி

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், தமிழ்நாட்டில் பா.ஜனதா காலூன்ற வாய்ப்பு என முரளிதரராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பா.ஜனதா காலூன்ற வாய்ப்பு: முரளிதரராவ் பேட்டி
Published on

சென்னை:

பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பா.ஜனதா வெற்றி பெறவில்லை. எனவே வருகிற 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தென்னிந்தியாவில் வெற்றி பெற பா.ஜனதா குறி வைத்துள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 136 தொகுதிகள் உள்ளன. அவற்றில் தமிழ்நாட்டில் 39 இடங்களும், புதுச்சேரியில் 1 இடமும் அடங்கும்.

இந்த மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். தற்போது இங்கு பா.ஜனதாவுக்கு சாதகமான நிலை உள்ளது. எனவே அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜனதாவின் சிறப்பான செயல்பாட்டின் மூலம் இங்கு வெற்றி பெறுவோம்.

தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. பா.ஜனதா மீது மக்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது.

பிரதமர் மோடியின் தலைமை மிகப்பெரிய பலமாக உள்ளது. லஞ்ச ஊழலற்ற ஆட்சி நடத்தும் பா.ஜனதாவின் திறமையும் சாதகமாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகிறார்கள். அங்கு பா.ஜனதா காலூன்ற அதிக வாய்ப்பு அமைந்துள்ளது. தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறியது போன்ற நல்ல சிறப்பான ஆட்சியை மோடி நடத்துகிறார். அதை தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.

அத்தகைய நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர்ச்சியடைய 100 சதவீதம் உதவியாக இருக்கும். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் பா.ஜனதாவில் சேர மிகவும் ஆவலாக உள்ளனர். இனி வரும் காலங்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பா.ஜனதா கட்சி மட்டுமே வளரும் நிலை உள்ளது. மற்ற அனைத்து கட்சிகளும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்த வரை அ.தி.மு.க.வுடன் நாங்கள் தோழமையுடன் இருக்கிறோம். தி.மு.க.வின் ஓட்டு சதவிகிதம், புதிய உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோரின் சேர்க்கை விகிதம் அதிகரிக்கவில்லை. எனவே அக்கட்சி குறிப்பிட்ட அளவிலேயேதான் உள்ளது.

தி.மு.க.வில் புதிதாக யாரும் சேரவில்லை. அதனால் புதிய வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுப்பதில் அக்கட்சி தோல்வி அடைந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டு அக்கட்சியின் மதிப்பை குறைத்து விட்டது.

தமிழ்நாட்டை பொறுத்த வரை பா.ஜனதா கட்சி புதிய வழியில் செயல்படுகிறது. அரசியலில் ஊழல், குடும்ப அரசியல் போன்றவற்றை தமிழக மக்கள் விரும்ப வில்லை. இக்காரணங்களால் தமிழகத்தில் பா.ஜனதா முன்னணியில் உள்ளது.

திருவள்ளுவரின் திருக்குறளை தி.மு.க. அல்லது வேறு எந்த கட்சியும் பின்பற்ற வில்லை. திருக்குறள் தமிழர்களின் பெருமை. தமிழர்களின் அடையாளம். பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளின்படி நடக்கிறார்.

பா.ஜனதாவை பொறுத்தவரை சந்திரகுப்த மவுரியருக்கும், ராஜராஜ சோழனுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இருவரும் முக்கியமானவர்கள். தமிழ்நாட்டில் தற்போது பா.ஜனதா ஏறு முகத்தில் உள்ளது.

புதிய முகங்கள் மற்றும் புதிய ரத்தத்துடன் முற்றிலும் மாறுபட்ட பா.ஜனதாவை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். 2019-ம் ஆண்டில் முற்றிலும் புதிய கால கட்டம் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

X

Maalai Malar
www.maalaimalar.com