

சென்னை,:
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). வயது முதிர்வு காரணமாக கடந்த மாதம் வரை வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று டாக்டர்களிடமும், அன்பழகனின் குடும்பத்தாரிடமும் விசாரித்து அறிந்தார்.
இதற்கிடையே, அன்பழகனின் உடல் நிலை குறித்து விசாரிக்க மு.க.ஸ்டாலின் இன்றும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட பலர் சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பின், வெளியே வந்த முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வின் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அன்பழகனின் உடல் ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என தெரிவித்துள்ளார்.