

டெல்லி:
தேசிய தலைநகர் டெல்லியில் மாசு அதிகமாக காணப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் அக்டோபர் 31-ந்தேதி வரை பட்டாசுகளை வெடிப்பதற்கு கடந்த 9-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கிடையே, இந்த தடையை மேலும் நீட்டிக்கவேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் அர்ஜூன் கோபால் என்பவர் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காணப்படும் மாசுவின் அளவை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பதற்கான தடையை அக்டோபர் 31-ந்தேதிக்கு பிறகும் நீட்டிக்கவேண்டும் என்றும் இதை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை அவசர விசாரணைக்காக எடுத்துக் கொள்ளலாமா? என்பது குறித்து பரிசீலிக்கும் என்று தெரிவித்தது.