இடம்பெயர்ந்த தொழிலாளர்களை இரக்கமின்றி கைவிட்டது - மத்திய அரசு மீது காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

இடம் பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய அரசு இரக்கமின்றி கைவிட்டதாக காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியது.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி
Published on

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடலால் வேலை இழந்து, போக்குவரத்து சாதனங்கள் முடக்கத்தால் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் பல இடங்களிலும் அல்லல்படுகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, நேற்று டெல்லியில் இருந்து கொண்டு, காணொலி காட்சி வழியாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், முறைசாரா துறையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய, பலவீனமான பிரிவினராக இருக்கிறார்கள்.

ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்பாக தொழிலாளர்களுக்கு 4 மணி நேரம்தான் அவகாசம் தரப்பட்டது.

ஊர்களுக்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு சாப்பிட உணவு, தண்ணீர் தேவை. இந்த வகையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்த நிதியையும் தரவில்லை

தவறான இடம் பெயர்ந்த தொழிலாளர் நிர்வாகம், இந்த நாட்டின் ஏழைகள் மீதான மத்திய அரசின் அணுகுமுறையைக் காட்டுகிறது. மத்திய அரசு இரக்கமின்றி, கொடூரமாக இரண்டாவது சிந்தனையின்றி, ஒட்டுமொத்த இடம் பெயர்ந்த தொழிலாளர்களை கைவிட்டு விட்டது.

கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு தொழிலாளர்கள் சமூகத்துக்கு என்று வடிவமைத்த நிதிச்சலுகை என்னும் ஊசி மருந்தை வழங்க வேண்டும்.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் மாநில எல்லைகளில் தவித்து வருகின்றனர். பலர் பல கி.மீ. தொலைவில் உள்ள அவர்களுடைய ஊர்களுக்கு நடந்தே செல்லும் வலுக்கட்டாய நிலை உள்ளது. இப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக மாநில அரசுகளுக்கு கூடுதல் பணம் தரப்பட வேண்டும்.

தெலுங்கானாவில் இருந்து ஜார்கண்டுக்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒரு ரெயில் விட்டது எதிர்வினை. இது போதாது. மேலும், இது காலம் கடந்த ஒரு நடவடிக்கையும் ஆகும்.

இது மத்திய அரசின் தவிர்க்கும் நுட்பத்தை தெளிவாக காட்டுகிறது. தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு போய்ச்சேருவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசு தன் பொறுப்பை மாற்றுவது தெளிவாக தெரிகிறது. இது முழுமையான பாசாங்குத்தனம் மட்டுமல்ல, மத்திய அரசின் முரண்பாடான நிலையையும் காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com