ஈரானில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 429 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளான ஈரானில், இன்று மேலும் 75 பேர் இறந்துள்ளதை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 429 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து தெளிக்கும் நபர்
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து தெளிக்கும் நபர்
Published on

டெஹ்ரான்:

சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் மற்ற மாகாணங்களுக்கும் வேகமாக பரவியது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் தினமும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த 3 நாடுகளிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

இதற்கிடையே, ஈரானில் மந்திரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கொரோனா பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். மேலும், பல அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அங்கு பொது மக்களிடையே கடும் அச்சம் நிலவி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளான ஈரானில் இன்று மேலும் 75 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் கியானோஷ் ஜஹான்போர் கூறுகையில், ஈரானில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த 75 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இறந்துள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com