கண்ணில் நீர் வடிதல்-தைராய்டு பிரச்சினை: சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் விஜயகாந்துக்கு சிகிச்சை

கண்ணில் நீர் வடிதல், தைராய்டு பிரச்சினை காரணமாக விஜயகாந்த் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Published on

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவ்வப்போது சென்று அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜயகாந்துக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. கண்களில் இருந்து நீரும் வடிந்து கொண்டே இருக்கிறது. தைராய்டு பிரச்சினை காரணமாக அவரது கழுத்து பகுதி வீக்கமாகவே காணப்படும்.

உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்காக விஜயகாந்த் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் அரசியல் பணிகளுக்கிடையே கிடைக்கும் நேரங்களில் ஓய்வும் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக மீண்டும் சிங்கப்பூர் சென்றார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக சென்ற அவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் விஜயகாந்த் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆஸ்பத்திரியில் நோயாளிகள் அணியும் சீருடையுடன் அவர் காணப்படுகிறார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவரை உடனிருந்து கவனித்து வருகிறார்.

சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்து விட்டு இன்னும் சில தினங்களில் விஜயகாந்த் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் கட்சி பணிகளில் முன்பை விட தீவிரமாக செயல்படவும் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com