இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்த ஒருங்கிணைந்த அணிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
Published on

ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானதும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற அ.தி.மு.க. அம்மா அணிக்கும், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணிக்கும் போட்டி ஏற்பட்டது.

இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டாடினார்கள். இதனால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.

இதற்கிடையே பணப்பட்டுவாடாவால் இடைதேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணிகளும் இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்தை அணுகினார்கள். பிறகு அதிகாரிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரு அணியினரும் லட்சக்கணக்கில் ஆவணங்களைத் தயாரித்து தாக்கல் செய்தனர்.

அதன்பின்னர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் இணைந்தன. இதனால் இரட்டை இலைக்கான போட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கும் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணியினருக்கும் இடையிலான போட்டியாக மாறியது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து புதிய ஆவணங்களை தாக்கல் செய்தனர். அது போல டி.டி.வி.தினகரன் தரப்பினரும் நிறைய ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

அதன் அடிப்படையில் தலைமை தேர்தல் கமி‌ஷன் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார்கள். இரு அணி வக்கீல்களும் இரட்டை இலையை தங்களுக்கே தர வேண்டும் என வாதிட்டனர். விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை வெளியிடுவதை தேர்தல் கமி‌ஷன் ஒத்தி வைத்தது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக  தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மதியம் நிறைவடைந்தது. இதையடுத்து அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி-ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.  பிரமாண பத்திரங்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த தீர்ப்பை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அ.தி.மு.க.வின் சின்னம், கட்சியின் கொடி மற்றும் அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை முதல்வர் அணியினர் பயன்படுத்தலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com