

வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் மேகமலை அருவி அமைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது.
அதன் காரணமாக கடந்த வாரம் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர்.
இதனால் அருவிக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் மேகமலை வனப்பகுதியில் தற்போது மழை அளவு குறைந்துள்ளது. அதனால் அருவியில் நீர்வரத்து சீரானது.
இதையடுத்து நேற்று முதல் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது. இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அருவியில் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்ததால் மயிலாடும்பாறை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல மேகமலை வனத்துறையினரும் அருவியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.