ஒருங்கிணைப்பு இல்லையா? ஆளுநர் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர்

சில முகவர்கள் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டு மொத்த நிலைமையை மதிப்பிடாதது குறித்து கவலையை எழுப்பினர்.தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்- அமைச்சர்
ஒருங்கிணைப்பு இல்லையா? ஆளுநர் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர்
Published on

மிச்சாங் புயலைத் தொடர்ந்து 17 மற்றும் 18-ந்தேதிகளில் தென்மாவட்டங்களான திருநேல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 100 வருடங்கள் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டித்தீர்த்தது.

கனமழையுடன் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் குளங்கள், கால்வாய்கள் உடைத்து கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.

தேசிய பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட முப்படைகளும் மீட்புப் பணியில் களம் இறங்கியுள்ளன. மாநில அரசும் துரித மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. சுமார் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்களில் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று தென்மாவட்ட மழை வெள்ளம் பாதிப்பு, மீட்புப்பணி குறித்து தமிழக ஆளுநர் மத்திய அமைப்புகள் மற்றும் ஆயுதப்படைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கப் பிறகு ஆளுநர் மாளிகையில வெளியிட்ட அறிக்கையில் "தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது. மத்திய அரசு நிறுவனங்கள் தங்கள் வளங்களை மாநில அரசின் வசம் வைத்து, மாநிலம் கோரும்போது செய்து வருகின்றன. அவர்கள் மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குகிறார்கள்.

சில முகவர்கள் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டு மொத்த நிலைமையை மதிப்பிடாதது குறித்து கவலையை எழுப்பினர். மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கூடுதல் ஆதாரங்களைத் திரட்டுமாறு ஆளுநர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்த தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, "மத்திய அரசின் மீட்பு துறைகளுக்கும், மாநில அரசுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருந்தது. வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப் பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். களத்தில் உள்ள அனைவருக்கும் முதலமைச்சர் அறிவுரைகளை வழங்கி வருகிறார்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com