search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளம், குட்டைகளில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    குளம், குட்டைகளில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

    • பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த காளம்பாளையத்தில் அரசின் சார்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள கட்டிடம் பழுதடைந்து கீழேவிழும் நிலையில் உள்ளது.
    • திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலமாக நீர் நிரப்ப தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, ஊத்துக்குளி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.

    கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு செயலாளர் அப்புசாமி அளித்த மனுவில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலமாக நீர் நிரப்ப தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், தொரவலூர், மேற்குபதி, சொக்கனூர், பட்டம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளில் சீமை கரு–வேல மரங்கள், முட்புதர்களை அகற்றி, வண்டல் மண் எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு மண் அள்ளி தூர்வாரும்போது குளம் ஆழப்படுத்தப்படும்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்பட்டு வருவதால் வண்டல் மண் எடுத்து ஆழப்படுத்த விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இடைத்தரகர்கள் மண் அள்ளாமல் இருக்க அதிகாரிகள் கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த கூட்டத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த காளம்பாளையத்தில் அரசின் சார்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள கட்டிடம் பழுதடைந்து கீழேவிழும் நிலையில் உள்ளது. புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×