

நெல்லை:
கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே பேராயுதமாக திகழ்கிறது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் வாரந் தோறும் வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாம்களில் தகுதிவாய்ந்த நபர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. குறிப்பாக இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை18 வயதிற்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த நபர்களில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 63 சதவீதம் பேருக்கு இரு தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகே 2-வது தவணை தடுப்பூசி போடப் படுகிறது. அதனால் தான் இரு தவணை தடுப்பூசியும் செலுத் தியவர்களின் சதவீதம் சற்று குறைவாக உள்ளது.
உரிய நேரத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர் களை கண்டறிவதற்காக வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் தங்கள் பகுதிகளில் வீடு, வீடாக போன் செய்து தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரத்தையும், இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் அதற்கான காரணத்தையும் கேட்டு வருகின்றனர்.
இதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
15-18 வயதிற்குட்பட்டவர்களை பொறுத்தவரை 88 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் இதுவரை விருப்பம் தெரிவிக்காததால் செலுத்த முடியவில்லை.
12-14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை பொறுத்தவரை நெல்லை மாநகர பகுதியில் 21 ஆயிரம் பேர் தகுதி உடையவர்களாக இருக்கிறார்கள். இதில் தற்போது வரை 47 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இன்று நெல்லை மாவட்டத்தில் 515 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாணவ- மாணவிகள் உள்பட ஏராள மானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் வீடு வீடாக சென்று மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.