search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்தில் பாலாஜி கைதான பிறகும் அமைச்சராக நீடிக்கும் விவகாரம்- ஒப்புதல் அளிப்பது பற்றி கவர்னர் இன்று முடிவு
    X

    செந்தில் பாலாஜி கைதான பிறகும் அமைச்சராக நீடிக்கும் விவகாரம்- ஒப்புதல் அளிப்பது பற்றி கவர்னர் இன்று முடிவு

    • இலாகா இல்லா அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று முதலமைச்சர் பரிந்துரை.
    • பரிந்துரை குறித்து கவர்னர் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து இன்று முடிவு.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கோர்ட்டு அனுமதியுடன் இப்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவர் கைது செய்யப்பட்ட தகவலை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், சட்டசபை சபாநாயகருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முறைப்படி தெரிவித்து விட்டனர்.

    இந்த நிலையில் நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக் கைதிகளுக்கான பதிவேட்டு எண்.1440 வழங்கப்பட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமியிடம் பகிர்ந்தளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து கவர்னருக்கு நேற்று கடிதம் அனுப்பினார்.

    அதில் மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் அளிப்பதாக பரிந்துரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த பரிந்துரையை கவர்னர் ஏற்று அதற்கான உத்தரவை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அந்த பரிந்துரையில் செந்தில் பாலாஜி என்ன காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்? என்ற விவரம் இல்லாததால் அதை குறிப்பிடும்படி அரசுக்கு அதை திருப்பி அனுப்பிவிட்டார். இதன் காரணமாக அமைச்சர்களின் இலாகா மாற்றமும் ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கவர்னர் கேட்ட விளக்கத்துக்கு என்ன மாதிரியான பதில் தெரிவிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உரிய விளக்கங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

    அதில் நீங்கள் (கவர்னர்) கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் துரதிருஷ்டவசமானவை. கடிதத்தை திருப்பி அனுப்பியது அரசியல் சட்டத்துக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. அமைச்சர்களின் இலாகாக்களை பிரித்துக் கொடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியே தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த கடிதம் நேற்றிரவே கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக அமைச்சர் பொன்முடியும் நேற்றிரவு விரிவாக விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் அனுப்பி வைத்த கடிதம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்தை இன்று கேட்கிறார்.

    செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர அனுமதித்து கையெழுத்து போடலாமா? என்பது பற்றி முடிவு செய்து அறிவிக்க உள்ளார்.

    இதை ஏற்கும்பட்சத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையுடன் கூடுதல் பொறுப்பாக மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு வீட்டு வசதி வாரியத்துடன் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையும் ஒதுக்கியதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பார் என தெரிகிறது.

    இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று கவர்னர் மாளிகையில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×