ஆரல்வாய்மொழி அருகே லாரியின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு சம்பவங்களும் அதிக அளவு நடந்து வருகிறது. விபத்துக்களை தடுக்க போலீசார் சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
ஆரல்வாய்மொழி அருகே லாரியின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
Published on

நாகர்கோவில்:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கள்ளி குளம் பகுதியைச் சேர்ந்தவர் பால்துரை (வயது 65), தொழிலாளி.

இவர் இன்று காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் நாகர்கோவிலுக்கு வேலைக்கு புறப்பட்டார். காலை 7.30 மணியளவில் அவர் ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடம் பகுதியில் வந்தார்.

அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே பால்துரை வந்த போது, அந்த வழியாக ஒரு லாரி வந்தது. தாறுமாறாக ஓடிய அந்த லாரி எதிர்பாராதவிதமாக பால் துரையின் ஸ்கூட்டர் மீது மோதியது.

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து பால் துரை தூக்கி வீசப்பட்டார். சாலையில் விழுந்த அவர் மீது லாரியின் முன் சக்கரம் ஏறியது. இதனால் பால் துரை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்தை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பால் துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பால்துரை பலியானது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

ஆரல்வாய்மொழி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு சம்பவங்களும் அதிக அளவு நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com