வதந்தியை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர்- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

200-க்கும் மேற்பட்ட போலீசார் மையனூர், லா.கூடலூர், மாடாம்பூண்டி கூட்டு ரோடு வனப்பகுதி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்து நடந்ததாக சிலர் வதந்திகளை பரப்பினர்.
மாடாம்பூண்டி கூட்டு ரோடு பகுதியில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்த போது செய்த போது எடுத்த படம்.
மாடாம்பூண்டி கூட்டு ரோடு பகுதியில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்த போது செய்த போது எடுத்த படம்.
Published on

சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வாணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சத்தம் கேட்டது.

இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் அச்சமடைந்தனர். இந்நிலையில் சத்தம் கேட்பதற்கு முன்பு அப்பகுதியில் இரண்டு ராணுவ விமானங்கள் பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விமானங்கள் வெடித்து சிதறி இருக்கலாம் என தகவல் காட்டு தீ போல் பரவியது. இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், பகண்டை கூட்டுரோடு இன்ஸ்பெக்டர் பாலாஜி, வனத்துறை உயர் அதிகாரிகள், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் மையனூர், லா.கூடலூர், மாடாம்பூண்டி கூட்டு ரோடு வனப்பகுதி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.

ஆனால் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் இதேபோல் பலத்த சத்தம் கேட்டதாக தகவல்கள் வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

இந்நிலையில், இது குறித்து இந்திய விமானப்படை விமான தளம் சூலூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் விசாரித்ததில், இது வழக்கமான விமானப்படை பயிற்சி நடைமுறை என்றும், நேற்று கள்ளக்குறிச்சி பகுதியில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், உறுதி செய்யப்பட்டது.

எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், வதந்திகள் ஏதும் பரப்ப வேண்டாம் எனவும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஊட்டியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்து நடந்ததாக சிலர் வதந்திகளை பரப்பினர். எனவே இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூறுகையில், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், வதந்திகள் பரப்புவோர் மீது சட்டபடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com