மதுரை ரெயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட காங்கிரசார்

திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தேவர் சிலையில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டவாறு ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர்.
மதுரை ரெயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட காங்கிரசார்
Published on

மதுரை:

மதுரையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வடக்கு மாவட்ட தலைவர் ஆலந்தூர் ரவிச்சந்திரன் முன்னிலையில் போராட்டம் நடந்தது. ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட, அவர்கள் மீனாட்சி பஜாரில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி பேரணியாக வந்தனர். பின்பு போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பிரிவை சேர்ந்தவர்களும் ரெயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தேவர் சிலையில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.

ரெயில்நிலையம் வந்த அவர்களை போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார் தடுத்து நிறுத்தி, ரெயில் மறியல் நடத்த அனுமதி இல்லை என கூறி கலைந்து செல்லுங்கள் என்றார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டவாறு ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். உடனே பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று காலை கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் சிலை முன்பிருந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

ரெயில் நிலையம் அருகே அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் மறுப்பு தெரிவித்து அங்கேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மாணிக்கம் தாகூர் எம்.பி., முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com