search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.எம்.சவுந்தரராஜனுக்கு முழு உருவ வெண்கல சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்
    X

    டி.எம்.சவுந்தரராஜனுக்கு முழு உருவ வெண்கல சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.

    மதுரை:

    தமிழ் சினிமா வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசீகர குரலால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த பழம் பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

    1922-ம் ஆண்டு மார்ச் 24-ந்தேதி மதுரையில் பிறந்த அவர் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் இசை பயிற்சி பெற்று மேடைக்கச்சேரிகளில் பாடி வந்தார். 1950-ம் ஆண்டு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

    எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் தொடங்கி 1970-ம் ஆண்டுகளில் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான ஒருதலை ராகம் திரைப்படத்தின் நாயகன் வரை, பல்வேறு தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களுக்கும் பாடல்கள் பாடியிருக்கிறார். சுமார் 65 ஆண்டுகள் அவர் திரையுலகில் தன்னுடைய இசை பயணத்தை தொடர்ந்து வந்தார்.

    தன்னுடைய தனித்துவமான இசைப் பயணத்தில், இவர் செய்த சாதனைக்காக பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டன. இதுதவிர கலா ரத்னம், கான ரத்னம், அருள் இசை சித்தர், நவரச பவ நளின கான வர்ஷினி, ஞானாமிர்த வர்ஷினி, சாதனை சக்கரவர்த்தி, பாரதிய இசை மேகம், கான குரலோன் போன்ற பட்டங்களும் ரசிகர்களால் சூட்டப்பட்டது.

    2013-ம் ஆண்டு, தனது 91-வது வயதில் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் காலமானார். அவரது நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தவெளி வெளிவட்ட சாலை பகுதிக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். மேலும் அவரது புகழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மதுரையில் முழு திருவுருவச்சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    மதுரை தெற்கு வட்டம் முனிச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலம் (பழைய) அலுவலகக் கட்டிட வளாகத்தில் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் முழு திருவுருவச் சிலை அமைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.50 லட்சம் செலவில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

    இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவும், நாளை முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.

    விமான நிலையத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்டச் செயலாளர் மணிமாறன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முனிச்சாலையில் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் முழு உருவச் சிலையை திறந்து வைக்கிறார்.

    இதையடுத்து இரவில் தனியார் ஓட்டலில் தங்கும் அவர் நாளை காலை ராமநாதபுரம் புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×