ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் தி.மு.க. 6-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று மிக சிறப்பான வகையில் ஆட்சியினை நடத்தி வருகிறது.தேர்தலின்போது மக்களிடம் என்னென்ன வாக்குறுதிகள் எடுத்து வைத்தோமோ, தேர்தல் அறிக்கையில் என்னென்ன குறிப்பிட்டு காட்டியிருந்தோமோ அவை அத்தனையும் நிறைவேறி விட்டது என்று சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

கோவை:

தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் பேத்தி ஸ்ரீநிதி-பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ. மதியழகன் மகன் கவுசிக்தேவ் ஆகியோரது திருமணம் கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:-

இந்த திருமணத்தை பற்றி ஒரே வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், இந்த திருமணமானது சீர்திருத்த திருமணமாக நடந்தேறி இருக்கிறது. சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல. சுயமரியாதை உணர்வோடு நடந்த திருமணமாகவும், தமிழ்மொழியில் அரங்கேறிய திருமணமாகவும் இந்த திருமணம் உள்ளது.

இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால் அது சட்டப்படி செல்லுபடியாக கூடிய அங்கீகாரத்தை நாம் அன்றைக்கு பெற்றிருக்கவில்லை.

ஆனால் 1967-ல் தமிழகத்தில் நடந்த பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க.ஆட்சி அமைந்தது. அண்ணா முதல்-அமைச்சராக சட்டமன்றத்திற்குள் நுழைந்தது முதல் தீர்மானமாக நிறைவேற்றி தந்த தீர்மானம் தான், சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லும் என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தார். ஆகவே இன்று நடந்த இந்த சீர்திருத்த திருமணம் சட்டப்படி முறைப்படி செல்லும் என்ற அங்கீகாரத்தோடு நடந்துள்ளது.

தமிழகத்தில் தி.மு.க. 6-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று மிக சிறப்பான வகையில் ஆட்சியினை நடத்தி வருகிறது. தேர்தலின் போது மக்களிடம் என்னென்ன வாக்குறுதிகள் எடுத்து வைத்தோமோ, தேர்தல் அறிக்கையில் என்னென்ன குறிப்பிட்டு காட்டியிருந்தோமோ அவை அத்தனையும் நிறைவேறி விட்டது என்று சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை.

நிச்சயமாக உறுதியாக 70 சதவீதம் நிறைவேறி இருக்கிறது. மீதி 30 சதவீதமும் விரைவில் நிறைவேற்றுவோம். அதனை நிறைவேற்றி காட்டுவோம். அது உங்களுக்கும் தெரியும்.

மக்களும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இதை நான் குறிப்பிட்டு சொல்வதற்கு முக்கிய காரணம். 4 நாளுக்கு முன்பு தான் கோவை வந்தேன். விமான நிலையத்தில் இருந்து அரசு விடுதிக்கு 10 முதல் 15 நிமிடத்தில் சென்று விடலாம். ஆனால் மக்கள் கொடுத்த வரவேற்பை பெற்றுக்கொண்டு நான் செல்ல 2 மணி நேரம் ஆகியது. சாலையின் இருபுறங்களிலும் பெண்கள், ஆண்கள் என எல்லா தரப்பினரும் என்னை வாழ்த்தி கோஷம் எழுப்பி வரவேற்றனர். ஆங்காங்கே சிலர் மனுக்களையும் கொடுத்தனர்.

எப்பவும் சிலர் மனுக்களை கொடுக்கும்போது கொஞ்சம் ஏக்கம் வருத்தத்தோடு கொடுக்கும் பாணியை தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் என்னிடம் கொடுத்தபோது மகிழ்ச்சியோடு, பூரிப்போடு, நம்பிக்கையோடு மனு கொடுக்கின்றனர். மனு கொடுத்த உடனே நன்றி நன்றி என்று கூறுகின்றனர். ஏதோ முடிந்து விட்டது மாதிரி. மனு கொடுத்த உடனே இது முடிந்து விடும் என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிட்டது. அதுதான் நமது திராவிடமாடல் ஆட்சி.

தேர்தல் அறிக்கையில் முக்கியமானது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தான். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக நாம் சொல்லவில்லை. அவர்கள் கட்சியினரே சொன்னது. அந்த கட்சியில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர். ஜெயலலிதா எப்போது எல்லாம் முதல்வர் பதவியில் இருந்து விலகும் நிலை உருவானதோ அப்போதெல்லாம் முதல்-அமைச்சராக பணியாற்றிய ஓ.பன்னீர்செல்வம் தான்.

அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் கோபத்தோடும், ஆத்திரத்தோடும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று ஆவியோடு பேசுகிறேன் என்றார்.

அங்கு அமர்ந்து தியானம் பண்ணினார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. நீதி வேண்டும் என அவரே சொன்னார். அவரை சரி செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு ஒப்புக்காக, ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு கமிஷனை அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அந்த விசாரணை கமிஷன் எத்தனை நாட்கள் நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அது ஒப்புக்காக நடந்தது. அப்போது தான் சட்டமன்ற தேர்தலின் போது, நாம் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷனை முறையாக நடத்தி, அறிக்கை பெற்று முறையான நடவடிக்கை எடுப்போம் என உறுதிமொழி கூறினோம்.

4 நாட்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை என்னிடம் கொடுத்தார். அந்த அறிக்கையில் பல பிரச்சினைகள் உள்ளது. அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். சட்டமன்றத்தில் வரும்.

சட்டமன்றத்தில் வைத்து, வெளிப்படையாக உரிய நடவடிக்கையை சட்டமன்றத்தின் மூலமாக நிறைவேற்றி காட்டுவோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவிக்கிறேன். அது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம்.

தூத்துக்குடியில் நடந்த சம்பவம் குறித்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அப்படி சம்பவம் நடந்தது டி.வி.பார்த்து தெரிஞ்சுகிட்டேன் என்று சொன்னார். அது தொடர்பான விசாரணை அறிக்கையும் என்னிடம் வந்துள்ளது. அதுகுறித்தும் விவாதித்தோம். அந்த விவகாரங்கள் அனைத்தையும் சட்டமன்றத்தில் வைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, எ.வ. வேலு, சாமிநாதன், முத்துசாமி, கயல்விழி செல்வராஜ், நாசர், கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com