தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு- அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் 48 சதவீதம் விவசாய நிலம் தற்போது 38 சதவீதமாக சுருங்கி விட்டது.கூலிப்படை கலாச்சாரத்தை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு- அன்புமணி ராமதாஸ்
Published on

கே.கே.நகர்:

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்கள் மற்ற பயன்பாட்டிற்கான நிலமாக அதிகம் மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 48 சதவீதம் விவசாய நிலம் தற்போது 38 சதவீதமாக சுருங்கி விட்டது. இதற்கு கடந்த 50 ஆண்டுகளில் இந்த இரண்டு கட்சிகளும் பாசன வசதிக்கு எந்த திட்டமும் கொண்டு வராததே காரணம்.

கர்நாடகா சட்டபேரவையில் அணை கட்ட போகிறோம் என கூறி உள்ளனர். இரண்டு மாநில நல்உறவை கெடுக்கும் வகையில் கர்நாடகவில் உள்ள முதல்வரும், துணை முதல்வரும் தூண்டி வருகின்றனர். இது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் நீர் பங்கீட்டில் நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடகா கடைபிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முத்துசாமி (மது விலக்கு துறை) இந்த துறைக்கு அவர் வந்தது பராவாயில்லை என்று நினைத்தேன். ஆனால் அவர் பேசுவதை பார்த்தால் பயமாக உள்ளது. திருமணத்தில் மது விற்பனை, சந்துக்கடை விற்பனை என மது விற்பனை துறையாக தமிழக மது விலக்கு துறை செயல்பட்டு வருகிறது.

கூலிப்படை கலாச்சாரத்தை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும்.

காவல்துறைக்கு கஞ்சா விற்பனை பற்றி தெரியும்-கஞ்சாவை யார் விற்பனை செய்கிறார்கள்-எப்படி வருகிறது எல்லாம் தெரியும் ஆனால் நடவடிக்கை இல்லை. இந்த தலைமுறை அழிந்து கொண்டு உள்ளது. தமிழக முதல்வர் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியோடு நாங்கள் டெல்லியில் கூட்டணியில் இருக்கிறோம். வரும் 18-ந் தேதி நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம். பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம்.

கவர்னர் அரசியல் பேசக்கூடாது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் கூறுவதை தான் கவர்னர் கேட்க வேண்டும். அதில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாமே தவிர வேறு எதுவும் அவர் பேசக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com