

சிவகங்கை
சென்னை முதன்மை செயலாளர்-தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின்படி சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
மேற்படி தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IVEE என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தன்று 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவ னங்களின் மீது சிவகங்கை மாவட்ட த்தில் 55 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.