search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிறைபடி கம்பு வைத்து பூஜை - விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    சிவன்மலை உத்தரவுபெட்டியில்   வைக்கப்பட்டுள்ள கம்பு 

    நிறைபடி கம்பு வைத்து பூஜை - விவசாயிகள் மகிழ்ச்சி

    • உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.
    • உணவு தானிய பயிர் விளைச்சல் அதிகரிக்கலாம் என்பதை சிவன்மலை ஆண்டவன் உணர்த்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    காங்கயம்,

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் உள்ள முருகப் பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோவில்களில் முக்கியமான கோவிலாகும். சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற ஸ்தலமாகவும், விநாயகப் பெருமான் முருகனை வழிபடும் புகழ்பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

    வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத சிறப்பு இந்தக் கோவிலுக்கு உள்ளது. அது இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். முருகப் பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார்.

    அவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்தப் பொருள் பெட்டியில் வைக்கப்படுவது வழக்கம். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.

    அடுத்தொரு பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும். இவ்வாறு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையானதாகவும் இருக்கலாம். எதிர்மறையானதாகவும் இருக்கலாம்.

    முந்தைய காலங்களில் சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்ட போது, அதன் பயன்பாடு வெகுவாகக் குறைந்து போனது. மண் வைத்து பூஜிக்கப்பட்டபோது நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது. துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா வெற்றி வாகை சூடியது. தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்டபோது சுனாமி பேரலை ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாயினர்.

    இவ்வாறு எந்தப் பொருள் வைக்கப் படுகிறதோ, அது ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 1 ந்தேதி முதல் கடலூர் பகுதியைச் சேர்ந்த கபில்தேவ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான ஸ்ரீபோகரின் திருவுருவப்படம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

    1-ந் தேதி வைக்கப்பட்டு 2நாட்கள் மட்டுமே பூஜிக்கப்பட்ட நிலையில் கோவை, பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த காமராஜ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான 3கிலோ விபூதி மற்றும் 7எலுமிச்சை பழங்கள் வைத்து ஏப்ரல்4-ந் தேதி முதல் பூஜிக்கப்பட்டு வந்தது.

    தற்போது பக்தர் ஒருவரின் கனவில் உத்தரவான நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.இது போல் இதற்கு முன்பாக தானியங்கள் வைத்து பூஜை செய்தபோது அதன் விளைச்சல் உயர்வு மற்றும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. தற்போது கம்பு வைத்து பூஜை செய்வது மானாவாரி நிலங்களில் அதிக அளவில் இந்த ஆண்டு சாகுபடி பணிகள் நடைபெறலாம்.

    அதன் மூலம் உணவு தானிய பயிர் விளைச்சல் அதிகரிக்கலாம் என்பதை சிவன்மலை ஆண்டவன் உணர்த்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில் தற்போது தென்மேற்கு பருவ மழை சராசரியாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்,அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கயம் சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்வது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×