மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கவேண்டிய மின்சாரம் கிடைக்காததால்தான் மின்தடை- அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் 41 இடங்களில் மட்டுமே மின்தடை ஏற்பட்டதாகவும், இதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மின்தடை சரிசெய்யப்பட்டதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி
Published on

சென்னை:

தமிழகத்தில் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.  அதில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, காங்கிரசின் செல்வப்-பெருந்தகை ஆகியோர்  பேசினார்கள். 

இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

‘கடந்த 18-ந் தேதி 317 மில்லியன் யூனிட்டாக இருந்த நுகர்வு, 21-ந் தேதி 343 மில்லியன் யூனிட்டாக உயர்ந்தது. இந்த நிலையில் ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து வரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் வரவில்லை. இதனால் மின்தடை ஏற்பட்டது. 3 ஆயிரம் மெகாவாட் குறைந்த விலையில் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் நிலக்கரி இறக்குமதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 41 இடங்களில் மட்டுமே மின்தடை ஏற்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மின்தடை சரிசெய்யப்பட்டது. ஆனால் இதற்கு முன்பு மின்தடை ஏற்படாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். 

ஆனால், கடந்த ஆண்டுகளில் 68 முறை மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் ஒரு முறை மட்டுமே ஏற்பட்டது’ என அமைச்சர் பேசினார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார். 

அப்போது பேசிய அமைச்சர், ‘நிலக்கரி ஒதுக்கீடு குறித்து பிரதமரை சந்தித்த போதும் முதலமைச்சர் வலியுறுத்தினார். மேலும், இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி விஷம பிரச்சாரத்தை அ.தி.மு.க.வின் ஐ.டி. விங்க் செய்து வருகிறது. வரும் 5 ஆண்டுகளில் மின்மிகை மாநிலமாக தமிழகத்தை முதலமைச்சர் மாற்றிக் காட்டுவார். தொழிற்சாலைகளுக்கும், மக்களுக்கும் எந்த சூழலிலும் இனி மின்தடை ஏற்படாமல், சீரான மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com