search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் சிறப்பு சந்தைக்கு கரும்புகள் வரத்தொடங்கின- ஒரு கட்டு ரூ.300 வரை விற்பனை
    X

    பொங்கல் சிறப்பு சந்தைக்கு கரும்புகள் வரத்தொடங்கின- ஒரு கட்டு ரூ.300 வரை விற்பனை

    • கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை தொடங்கி உள்ளது.
    • முதல் கட்டமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு நேற்று முதல் கரும்புகள் விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளன.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூ மார்க்கெட் வளாகத்தின் பின்பகுதியில் உள்ள காலி இடத்தில் சிறப்பு சந்தை நடைபெறும்.

    அங்காடி நிர்வாக குழு மூலம் ஏலம் விடப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படும் இடத்தில் வெளியூர் வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்து பொதுமக்கள் வசதிக்காக பண்டிகைக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் விற்பனை செய்வார்கள்.

    மார்க்கெட் வளாகத்தில் சிறப்பு சந்தை மூலம் பொருட்களை விற்பனை செய்வதன் காரணமாக மார்க்கெட்டில் உரிமம் பெற்று கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    மேலும் அங்காடி நிர்வாக குழு மூலம் நிர்ணயிக்கும் தொகையை காட்டிலும் வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு ஏலதாரர்கள் பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

    இதையடுத்து வழக்கமாக நடைபெறும் ஏல முறை அதிரடியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள 'ஏ' சாலையில் சி.எம்.டி.ஏ-வுக்கு சொந்தமான சுமார் 3.5 ஏக்கர் இடத்தில் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    அதன்படி கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை தொடங்கி உள்ளது. இந்த சிறப்பு சந்தை வருகிற 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைத்தார், தேங்காய், மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    முதல் கட்டமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு நேற்று முதல் கரும்புகள் விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளன. நேற்று 25 லாரிகளிலும் இன்று அதிகாலை மேலும் 20 லாரிகளிலும் கரும்புகள் விற்பனைக்கு குவிந்து உள்ளன.

    20 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ.200 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பாக கரும்பும் கொடுக்கப்பட்டு வருவதால் தற்போது எதிர்பார்த்த விற்பனை நடக்கவில்லை என்று கரும்பு வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பொங்கல் பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை முதல் விழுப்புரம், மதுரை, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான லாரிகளில் விற்பனைக்கு கரும்பு விற்பனைக்கு வர உள்ளன.

    இதேபோல் அன்றைய தினம் இஞ்சி, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களும் ஏராளமான வாகனங்களில் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே வருகிற வெள்ளிக்கிழமை முதல் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து அதிகரித்து பொங்கல் சந்தையில் விற்பனை சூடுபிடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×