

நெல்லை:
உவரி அருகே நவ்வலடி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களான ராகுல், முகேஷ், ஆகாஷ் ஆகிய 3 பேரும் கடலில் மூழ்கி பலியானார்கள். தகவல் அறிந்ததும் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, 3 பேரின் வீடுகளுக்கு நேற்று காலை நேரில் சென்றார். அவர்களின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கடல் அலையில் சிக்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு நிவாரண நிதியாக தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். ஏரி, கடல் போன்ற நீர்நிலைகளுக்கு செல்லும்போது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாமல் செல்லக்கூடாது என்பன போன்ற விழிப்புணர்வு பாடங்களையும், போதனைகளையும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வழங்க கல்வித்துறை முயற்சி எடுக்க வேண்டும்" என்றார்.
பின்னர் மாலையில் மாணவர்கள் 3 பேரின் உடல்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நவ்வலடி கடற்கரை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் ஊர்வலமாக நடந்து சென்ற முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, 3 பேரின் உடல்களுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வள்ளியூர் அருண்குமார், வள்ளியூர் பேரூர் கழக துணை செயலாளர் கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய தலைவர் ஆவுடை மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.