மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: அருவிகளில் வெள்ளப்பெருக்கு

குரங்கணி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: அருவிகளில் வெள்ளப்பெருக்கு
Published on

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குரங்கணி டாப் ஸ்டேஷன், முதுவாக்குடி, கொழுக்குமலை, முட்டம், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் போடியின் முக்கிய நீர் ஆதாரமான குரங்கணி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீரோடையில் கட்டப்பட்டுள்ள சுமார் 7 அடி ஆழமுள்ள நீர் தேக்க தொட்டி மற்றும் தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் குரங்கணி அருவி, நீரோடைக்கு செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களாக மஞ்சளாறு அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்து எலிவால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது.

தமிழகத்திலுள்ள அருவிகளில் மிகவும் உயரமானது எலிவால் அருவி. இந்த அருவி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் முதன் முதலில் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.

எனவே எலிவால் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதை சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

இதேபோல் கும்பக்கரை அருவியில் கடந்த 12ம் தேதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வித்தித்தனர். தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாமல் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com