கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கீழடியில் இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.அகழாய்வு பணிகள் வழக்கமாக ஜனவரி மாதம் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும்.
கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை:

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் தமிழர் பண்பாட்டை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு பண்டைய கால பொருட்கள் கிடைத்து வருகின்றன.

வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு உள்ளது. கீழடியில் இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்திய தொல்லியல் துறை சார்பில் 3 கட்டமாக அகழாய்வு பணிகளும், தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் 5 கட்டமாக அகழாய்வு பணிகளும் நடந்துள்ளது. இந்த அகழாய்வுகளின்போது சூது பவளம், உறை கிணறுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடு, ஒரு இஞ்ச் பானை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்க்கும் விதமாக கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் நேரில் வந்து திறந்து வைத்தார். அருங்காட்சியகம் அவரே வியக்கும் வகையில் இருந்தது.

இதனை தொடர்ந்து கீழடி அருங்காட்சியத்தை தினமும் ஏராளமான வரலாற்று ஆய்வாளர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

அகழாய்வு பணிகள் வழக்கமாக ஜனவரி மாதம் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும்.

ஆனால் கீழடி அருங்காட்சியகத்தில் பொருட்களை காட்சிப்படுத்தும் பணியில் தமிழக தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) சிவானந்தம், கீழடி அகழாய்வு இணை இயக்குநர் ரமேஷ், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் அஜய், காவ்யா உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர்.

இதனால் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது அருங்காட்சியகம் திறக்கப்பட்டு விட்டதால் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து கீழடியில் 9-ம் கட்டமாக அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

கீழடியில் நடந்த அகழாய்வு பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் அரசு அலுவலர்கள், தொல்லியல் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனடிப்படையில் அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளது.

தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) சிவானந்தம், இணை இயக்குநர் (கீழடி பிரிவு) ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய், காவ்யா உள்ளிட்டோர் தலைமையிலான பணியாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com