search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழி அருகே அரசு பஸ் மீது கார் மோதி விபத்து- நடன கலைஞர்கள் 4 பேர் பலி
    X

    பஸ் மீது கார் மோதி நிற்பதை காணலாம்

    ஆரல்வாய்மொழி அருகே அரசு பஸ் மீது கார் மோதி விபத்து- நடன கலைஞர்கள் 4 பேர் பலி

    • மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த சிலர், கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
    • விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதுபோல காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    ஆரல்வாய்மொழி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த சிலர், கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஒரு குழுவாக வெளியூர்களுக்கும் சென்று நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து அழைத்துச்செல்ல ஏஜண்டுகளும் உள்ளனர்.

    அதன்படி 3 பெண்கள் உள்பட 12 பேர் கொண்ட நடன குழுவினர் ஒரு காரில் நேற்று திருச்செந்தூர் பகுதியில் நடந்த கோவில் விழாவுக்கு ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்காக சென்றனர். அங்கு நள்ளிரவுக்கும் மேலாக அவர்கள் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். பின்னர் இன்று அதிகாலை அவர்கள் காரில் ஊருக்கு புறப்பட்டனர். காரை டிரைவர் கண்ணன் ஓட்டினார்.

    ஆரல்வாய்மொழி அருகே நாகர்கோவில்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளமடம் பகுதியில் வளைவான சாலையில் கார் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. காருக்குள் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு முன்பே கார் எதிர்திசை நோக்கி பாய்ந்துள்ளது. அப்போது அங்கு நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து ரோஸ்மியாபுரம் செல்லும் அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் மீது, கட்டுப்பாட்டை இழந்து சென்ற கார் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதுபோல காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மோதிய வேகத்தில் காரில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அவர்களது உடமைகளும் சாலையில் சிதறி விழுந்தன. விபத்து நடந்ததும் காரில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். டிரைவர் கண்ணன் காரின் இருக்கையில் படுகாயத்துடன் கிடந்ததால் அவரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    இதனை தொடர்ந்து நாகர்கோவில் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சுமார் ½ மணி நேரம் போராடி டிரைவர் கண்ணனை மீட்டனர். தொடர்ந்து காரில் படுகாயத்துடன் இருந்த 8 பேர் மீட்கப்பட்டனர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் வந்தனர். அவர்கள் காயத்துடன் மீட்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு செல்லும் வழியில் டிரைவர் கண்ணன் பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆனது. மற்ற 8 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான காரை போலீசார் கயிறு கட்டி இழுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பிறகே போக்குவரத்து சீரானது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியானவர்கள் யார்? என்பது குறித்து காயம் அடைந்தவர்களிடம் விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு சென்றவர்கள், பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், ஏஜண்டு மூலம் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்லப்பட்டதால், ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பாக ராணித்தோட்டம் அரசு பஸ் டிரைவர் இமானுவேலிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் ஆகியோரும் சம்பவ இடம் வந்து பார்வையிட்டனர். அவர்கள் விபத்து குறித்த விவரம் கேட்டறிந்தனர்.

    Next Story
    ×