

அமெரிக்காவில் இருந்து வந்த காஞ்சிபுரம் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்தனர்.
அவரது ரத்த மாதிரி எடுத்து ஆய்வு செய்ததில் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கிண்டி கிங் ஆய்வு மையம் மற்றும் புனே ஆராய்ச்சி மையத்திலும் பரிசோதனை செய்யப்பட்டதில் ‘பாசிட்டிவ்’ முடிவு தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடன் வந்த உறவினர்களுக்கு சோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பாதித்த முதல் நபராக இருந்த என்ஜினீயருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் மூலம் அவரது ரத்த மாதிரி மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கலந்திருந்த வைரஸ் கிருமி அழிக்கப்பட்டு விட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிய வந்தது.
இதையடுத்து கடந்த 5 நாட்களாக அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். பின்னர் கொரோனா வைரஸ் தனி வார்டில் இருந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்.
டாக்டர்கள் அவரது உடல் எடையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவமனையின் டீன் ஜெயந்தி, காஞ்சிபுரம் என்ஜினீயரின் உடல் நலம் குறித்து கூறும்போது, ‘ஒவ்வொரு நாளும் அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவர்களின் ஆலோசனைபடி அவர் செயல்பட்டதால் விரைவில் குணமடைந்துள்ளார்.
திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு உள்ளது என்றார்.