

புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து நேற்று உரையாற்றினார். மாநிலங்களவையில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தார்.
அவரது சிரிப்பை கேலி செய்யும் வகையில் பிரதமர் மோடி பேசினார். ‘ராமாயணம் சீரியலுக்கு பிறகு, இத்தனை சப்தத்துடன் சிரிக்கும் பெண்ணை பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது’ என மோடி பேசியதும் பா.ஜ.க.வினர் சிரித்தனர்.
ரேணுகா சவுத்ரியை மோடி இவ்வாறு விமர்சனம் செய்தது இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. மாநிலங்களவையில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களவையில் ஆந்திர எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை பகல் 11.45 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #Tamilnews