சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலத்துக்குட்பட்ட தில்லைநகர் மற்றும் சிங்காரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.
சேலம் கலெக்டர் ராமன்
சேலம் கலெக்டர் ராமன்
Published on

சேலம்:

சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலத்துக்குட்பட்ட தில்லைநகர் மற்றும் சிங்காரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்ட நபர்கள் தங்கியிருந்த பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு, பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள், கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் கொரோனா பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளான நபர்கள் அவர்களின் வீடுகளிலேயே தங்கி இருப்பதை நாள்தோறும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிவதோடு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மாநகராட்சி பணியாளர்களின் மூலம் அப்பொருட்களுக்குரிய தொகையை பெற்றுக்கொண்டு வழங்க வேண்டும்.

டாக்டர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தங்கியுள்ள தொற்றுக்குள்ளான நபர்களை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். மேலும், மருத்துவ முகாமுக்கு வரும் நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள், ஆர்சினிக் மாத்திரைகள் மற்றும் முக கவசங்களும் இலவசமாக தொடர்ந்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தொலைபேசி கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் ராமன் பார்வையிட்டு, பொதுமக்கள் தெரிவிக்கின்ற குறைகளை அன்றைய தினமே நிவர்த்தி செய்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அம்மாபேட்டை அண்ணா மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் கலெக்டர் பார்வையிட்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது சேலம் மாநகராட்சி ஆணையாளர்சதீஷ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார், மாநகர நல அலுவலர் பார்த்திபன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com