

புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழகத்தின் 27-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஜவகர்லால்நேரு அரங்கில் நடந்தது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். தங்கப்பதக்கம் பெறுவோர் பட்டியலில் கேரளாவை சேர்ந்த மாணவி ரபீஹா அப்துல்ரகீம் இடம் பெற்றிருந்தார். இவர் மாஸ் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றிருந்தார்.
விழா ஆரம்பிக்கும் சில நிமிடம் முன்பு அவரை போலீசார் அரங்கத்திலிருந்து வெளியேற்றினர். அவரை தனியாக ஒரு அறையில் அமர வைத்தனர். விழா முடிந்தவுடன் அந்த மாணவி அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். ஜனாதிபதி சென்ற பிறகு கல்வித்துறை செயலர் அன்பரசு, பட்டங்களையும், தங்க பதக்கத்தையும் மாணவர்களுக்கு வழங்கினார். மாணவி ரபிஹா தன்னை விழாவிற்கு அனுமதிக்காததை கண்டித்து தங்கப்பதக்கம் தேவையில்லை என்று கூறி அதனை வாங்க மறுத்துவிட்டார். சான்றிதழை மட்டும் பெற்றுக்கொண்டார்.
மாணவி வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பல்லைக்கழக துணை வேந்தர் குர்மீத்சிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மாணவி வெளியேற்றப்பட்டது தொடர்பாக விளக்க அறிக்கை கேட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புதுவை பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபீஹாவை அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது.
நான் கலந்துகொண்டிருந்தாலும் நான் அதை அறிந்திருக்கவில்லை. கருத்து வேறுபாடு உரிமை ஜனநாயகத்தின் சாராம்சம். இது தொடர்பாக பல்கலைகழக துணை வேந்தரிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் மாணவி ரபீஹாவும் பங்கேற்றார். இதனால் அவர் ஜனாதிபதி விழாவில் ஏதேனும் பிரச்சனையில் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரை பாதுகாப்பு காரணத்திற்காக வெளியேற்றியதாக கூறப்படுகிறது. மாணவி வெளியேற்றப்பட்ட சம்பவத்திற்காக ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர்கள் பேரவையும் கண்டனம் தெரிவித்துள்ளது.