ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும்: முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று முதல்-மந்திரி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். #CMKumaraswamy
ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும்: முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை
Published on

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. கூட்டணி ஆட்சியின் முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனுமான குமாரசாமி இருந்து வருகிறார். துணை முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் உள்ளார்.

இந்த நிலையில் மந்திரி பதவி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி இருப்பதால், இதனை சாதகமாக பயன்படுத்தி கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா முயற்சி செய்வதாக காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகதாயி நதிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளேன். மகதாயி பிரச்சினையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை விரைவில் கூட்டுவேன். தர்மஸ்தலா மஞ்சுநாத கோவில் நிர்வாகம் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது.

அதில் ரூ.8 கோடி நிதியை அந்த கோவில் நிர்வாகம் சார்பில் நேரடியாக மக்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. மேலும் அந்த கோவில் நிர்வாகம் ரூ.2 கோடி, முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்இந்திய முதல்-மந்திரிகள் மாநாடு வருகிற 18-ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தென்இந்திய மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள். எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சியின் பின்னணியில் யார்-யார் இருக்கிறார்கள் என்பது பற்றி அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும்.

பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது எடுத்தபடம்.

அத்தகையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை பாயும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் நான் தயாராகி வருகிறேன். ஆட்சியை கவிழ்க்க முடியாது. எனது கூட்டணி ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை நான் செய்கிறேன். நான் ஒன்றும் அமைதியாக உட்கார்ந்து இருக்கமாட்டேன்.

ஜனாதிபதி நாளை (அதாவது இன்று) பெலகாவிக்கு வருகிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் பெலகாவிக்கு செல்கிறேன். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அங்கு ஜனதா தரிசனம் நடத்தவும் முடிவு செய்துள்ளேன். அனைத்து மந்திரிகளும் என்பக்கம் தான் உள்ளனர். எந்த மந்திரியும் எனக்கு எதிராக செயல்படவில்லை.

பா.ஜனதாவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் எனது தொடர்பில் உள்ளனர். அவர்கள் மைசூரு பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை. மாநிலத்தின் பிற பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொன்னார்கள்.

இப்போது விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. ஆட்சி கவிழவில்லை. அடுத்து அக்டோபர் மாதம் 2-ந் தேதிக்குள் ஆட்சி கவிழும் என்று கெடு விதிப்பார்கள். அதன் பிறகு தசரா பண்டிகைக்குள் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று தேதி முடிவு செய்வார் கள். ஆனால் கூட்டணி ஆட்சி கவிழாது.

கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று செய்திகள் வெளியாவதால், அதிகாரிகள் மத்தியில் ஒருவித குழப்பம் மற்றும் சுறுசுறுப்பு குறைவு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் விதமாக அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளேன்.

ஆட்சியின் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தாமல், வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்துவேன். எனக்கு மாநிலத்தின் வளர்ச்சி தான் முக்கியம். நான் சுதந்திரமாக உள்ளேன். எதை பற்றியும் கவலைப்படமாட்டேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com