யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை - முதல்வர் பழனிசாமி பேச்சு

கட்சியே துவங்காமல் சிலர் பேசுகின்றனர், யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி
Published on

சென்னை:

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,

கூட்டணியை ஒருங்கிணைப்பதில் இடைவெளி இருந்ததால் பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றோம்.

தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன் கூட்டணி அமைத்தாலும், அது வலுவான கூட்டணியாக இருந்தது. பாராளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற இடைத்தேர்தலையும் பிரித்து பார்த்து மக்கள் வாக்களித்துள்ளனர்.

அதிமுக அரசு என்ன சாதனை செய்தது என்று ஸ்டாலின் கேட்கிறார், சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் மூலம் 5.11 லட்சம் மக்களின் குறைகளை தீர்த்துள்ளோம்.

10 ஆண்டுகளுக்கு மேல் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக, தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் செய்யவில்லை.  

என்னுடைய தந்தை திமுகவில் இருந்தவர். 1974ல் முதன் முதலாக அதிமுக கொடி கம்பத்தை எனது கிராமத்தில் நட்டேன். உடனடியாக அதை பிடுங்கி எறிந்தனர்.

அன்று ஆரம்பித்த கொடி கம்ப பிரச்சினை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் தைரியம் ஸ்டாலினுக்கு இல்லை. அதனால் தான் அரசு ஊழியர்களை தூண்டிவிடுகிறார்.

கட்சியே துவங்காமல் சிலர் பேசுகின்றனர். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை. டிடிவி தினகரன் மற்றும் குடும்பத்தினர் அதிமுக கட்சியை எவ்வளவு பாடாய் படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக அரசு யாருக்கும் அடிமை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,

அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை. நல்லாட்சியில் வெற்றி பெற்ற நாம், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்றார். இதனையடுத்து சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com