பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அற்புதம்மாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அற்புதம்மாள் கூறியுள்ளார்.
அற்புதம்மாள்
அற்புதம்மாள்
Published on

கடலூர்:

கடலூர் அருகே ஆண்டாள் முள்ளிப்பள்ளம் பகுதியில் நடந்த விழாவில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறை தண்டனையில் உள்ளனர். இதில் தற்போது உச்சநீதிமன்றம் தமிழக  கவர்னர் முடிவின்படி 7 பேர் விடுதலை சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டு உள்ளது.

இந்த 7 பேர் விடுதலை சம்பந்தமான முடிவை கவர்னர் 15 நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது தமிழக அரசு மீண்டும் வாய்தா கேட்டு உள்ளது. மேலும் அவ்வப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய அரசு சட்டத்தில் இடமில்லை என தமிழக அரசு சார்பில் கூறி வருகின்றனர். இது மட்டுமின்றி உச்சநீதிமன்றம் கூறியும் கவர்னர் நீண்ட அவகாசம் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் நேரடியாக கவர்னரை வலுக்கட்டாயமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது.

அதற்கு மாறாக தமிழக அரசு அழுத்தம் தந்து இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக தலையிட முடியாது என்பது மட்டும் தெரிவித்து வருகிறார்கள். அது ஏன் என தெரியவில்லை.

நாங்கள் சட்டத்தின்படி தான் இதுவரை இந்த வழக்கை அணுகி வருகின்றோம். உச்சநீதிமன்றம் 15 நாளில் முடிவு சொல்ல வேண்டுமென அறிவுறுத்தலின்படி கவர்னர் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் கட்சிக்கு அப்பாற்பட்டு அனைத்து தலைவர்களும் பேரறிவாளன் உள்பட பலரை விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

இதன் மூலம் தமிழக முதல்வர், கவர்னரை அணுகி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக பலமுறை முதலமைச்சர், சட்டத்துறை அமைச்சர், மத்திய அமைச்சர் என அனைவரையும் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். இந்த வழக்கு தொடர்பாக முடிவு தெரிந்த பிறகு அனைவரையும் நேரில் சந்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com