திண்டிவனத்தில் இருந்து அரியாங்குப்பத்துக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேர் கைது

ஊரடங்கு உத்தரவு காரணமாக திண்டிவனத்தில் இருந்து புதுவை அரியாங்குப்பத்துக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பாகூர்:

ஊரடங்கு உத்தரவு காரணமாக புதுவையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதே வேளையில் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இயங்கி வந்தன.

தற்போது சென்னை ஐகோர்ட்டு உத்தரவால் டாஸ்மாக் கடைகளும் இன்று முதல் மூடப்படுகிறது. இதற்கிடையே புதுவையில் இருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த நிலையில் தற்போது புதுவையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து மதுப்பாட்டில்களை கடத்தி வரும் சூழல் ஏற்பட்டதையடுத்து இதனை பயன்படுத்தி சிலர் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மதுப்பாட்டில்களை புதுவைக்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.

இதுபோல் விழுப்புரம் அருகே குத்தாம் பூண்டி மற்றும் நேமூர் கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து புதுவையில் விற்க மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த 4 பேரை திருக்கனூர் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் அரியாங்குப்பம் போலீசார் நேற்று மாலை அரியாங்குப்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்கு பைகளுடன் நின்றிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை திறந்து பார்த்த போது அதில் மதுப்பாட்டில்கள் இருந்தன. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் நோனாங்குப்பத்தை சேர்ந்த வேலு (வயது35), அரியாங்குப்பம் கலைஞர் நகரை சேர்ந்த பிரதாப்(36), ஸ்ரீராம்நகரை சேர்ந்த ராமதாஸ் (42) என்பதும் இவர்கள் திண்டிவனம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து தங்களது உறவினர்கள் மூலம் மதுப் பாட்டில்களை மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்க கொண்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 47 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com