search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பயம் நீக்கும் பைரவர் வழிபாடு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பயம் நீக்கும் பைரவர் வழிபாடு

    • தன்னை வழிபடுபவர்களுக்கு பயத்தை போக்குபவர், சுகவாழ்வு தருபவர்.
    • உலகில் தோன்றிய உயிர்களை உரிய நேரத்தில் அழிக்கிறார்.

    இரண்யாட்சனின் மகன் அந்தகாசூரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி கடும்தவம் புரிந்தான். அதன் மூலம் பல வரங்களையும் பெற்றான். அதனால் அகந்தை கொண்டவன், முனிவர்கள், தேவர்கள், தேவலோக பெண்கள் என்று அனைவரையும் துன்புறுத்தினான்.

    தேவர்கள் இதுபற்றி சிவபெருமானிடம் முறையிட்டனர். ஈசன் தன்னுடைய அவதாரமாக பைரவரைத் தோற்றுவித்து, அந்தகாசூரனை அழித்தார். 'பைரவர்' என்ற வடமொழிச் சொல்லுக்கு 'எதிரிகளுக்கு பயத்தை அளிப்பவர்' என்று பொருள். ஆனால் தன்னை வழிபடுபவர்களுக்கு பயத்தை போக்குபவர், சுகவாழ்வு தருபவர்.

    பைரவர் தோற்றம்

    நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்சபூதங்களால் உலகம் இயங்குகிறது. நிலத்தின் அதிதேவதையாக இருந்து பிரம்மன் படைப்புத் தொழில் செய்கிறார். நீருக்கு அதி தெய்வமான திருமால் காத்தல் தொழில் புரிகிறார். நெருப்பின் அதிதெய்வமான ருத்திரன், உலகில் தோன்றிய உயிர்களை உரிய நேரத்தில் அழிக்கிறார்.

    காற்றின் அதிதெய்வமான மகேஸ்வரர், ஒரு பிறப்பின் நினைவு மறுபிறப்புக்கு தெரியாதபடி மறைத்து, மறைப்பு தொழிலை செய்கிறார். ஆகாயத்தின் அதிதெய்வமான சதாசிவர், அருளல் தொழில் மூலமாக உயிர்களுக்கு பிறவிகளைக் கொடுத்து அருள்கிறார்.

    இந்த ஐந்து அதிதெய்வங்களையும் முழுமுதற் கடவுளாக எண்ணுதல் கூடாது. அதே நேரம் இவர்களை புறக்கணிக்கவும் கூடாது. இவர்களுக்கு மேலாக, முழு முதற்கடவுளாக இருந்து அருள்பவர், அனைத்திற்கும் மூலமான பரமசிவன் ஆவார். இவரின்றி முக்திப்பேறு அடைய முடியாது. இத்தகைய சிறப்பு பெற்ற சிவபெருமானின் மூர்த்தங்களில் ஒன்றுதான் பைரவர்.

    பல்வேறு பைரவர்கள்

    சிவாகமங்கள், சிற்பநூல்கள் பைரவ மூர்த்தங்களை அறுபத்து நான்கு என விரிக்கிறது. இவற்றில் சிறப்பான எட்டு வடிவங்கள் 'அஷ்ட பைரவர்' என்று போற்றப்படுகிறார்கள். 1. அசிதாங்க பைரவர், 2. ருரு பைரவர், 3. சண்ட பைரவர், 4 குரோதன பைரவர், 5. உன்மத்த பைரவர், 6. கபால பைரவர், 7. பீஷன பைரவர், 8. சம்ஹார பைரவர் ஆகியோர் அந்த எட்டு பைரவர்கள் ஆவர்.

    ஒரே பைரவர், எட்டு செயல்களை எட்டு திசைகளில் இருந்து செய்யும்போது, அஷ்ட பைரவராக காட்சிதருகிறார். பைரவர் பற்றி பல புராணங்கள் விவரிக்கின்றன. சிவபெருமானின் ஐந்து குமாரர் களின் வரிசையில், கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் ஆகியோருடன் பைரவரும் எண்ணப்படுகிறார். சிவபெருமான் வலிமைமிக்க ஞான மூர்த்தியாக பைரவரைத் தோற்று வித்து உலகினைக் காத்திட அருள்புரிந்துள்ளார்.

    Next Story
    ×