நாளை வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்

நாளை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்.
திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்.
Published on

முகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் மிக முக்கிய திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

விழாவில் கலந்து கொள்வதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் திருச்செந்தூர் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நாளை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப்பின் சுவாமி ஜெயந்திநாதர் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்று வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், தொடர்ந்து முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பின்னர் மகா தீபாராதனைக்குப் பின் தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன்,செந்தில் முருகன்,கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு சுகாதார வசதி, குடிநீர், மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com