search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் கோவிலில் இன்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா: திரளான பக்தர்கள் தரிசனம்
    X
    8-ம் திருவிழாவான இன்று காலை சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளிய காட்சி.

    திருச்செந்தூர் கோவிலில் இன்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா: திரளான பக்தர்கள் தரிசனம்

    • பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகரை கண்டால் வாழ்வில் செல்வம் செழிக்கும், வளம்சேரும் என்பது ஐதீகம்.
    • நாளை தேர் கடாட்சம் நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிர மணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வருகிறது.

    7-ம் திருவிழாவான நேற்று மாலை சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் செம்பட்டு அணிந்து செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    8-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர், பிரம்மன் அம்சமாக வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

    தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு விஷ்ணு அம்சமாக சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

    பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகரை கண்டால் வாழ்வில் செல்வம் செழிக்கும், வளம்சேரும் என்பது ஐதீகம். எனவே இதனை காண இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர்.

    9-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10 திருவிழாவான நாளை மறுநாள் (திங்கள் கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மீன லக்னத்தில் தேரோட்டம் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 7-ந்தேதி இரவு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது. 12-ம் திருவிழாவான 8-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா நடைபெற்று இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×