search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த போது எடுத்தபடம்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    • 4-ந்தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
    • 4-ந்தேதி இரவு 10 மணியளவில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்திரை வசந்த உற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் கடந்த 24-ந் தேதி மாலை கோவிலில் பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. இது 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும்.

    விழாவையொட்டி கடந்த 25-ந் தேதி முதல் வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) வரை காலையில் அருணாசலேஸ்வருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், இரவில் 3-ம் பிரகாரத்தில் மகிழ மரம் அருகில் உள்ள பன்னீர் மண்டபத்தில் அம்பாளுடன் சாமி எழுந்தருளி பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் முக்கிய நிகழ்வான 5-ம் விழாவான நேற்று முன்தினம் இரவு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி மற்றும் ஒளிவு உற்சவம் நடந்தது.

    சிவபெருமான் ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் போது உலகில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் நின்று இருள் சூழ்ந்து விடுவதால் அந்த தியானத்தை கலைப்பதற்காக தேவர்கள் மன்மதனை சாமி மீது அம்பு விட அனுப்பி வைக்கின்றனர். மன்மதன் இருளில் மறைந்து இருக்கும் சிவபெருமானை 2 முறை தேடி அம்பு விட முயற்சி செய்யும் நிகழ்வே ஒளிவு உற்சவம் என்று கூறப்படுகிறது.

    இந்த ஒளிவு உற்சவத்தை யொட்டி அம்பாளுடன் சாமி வண்ண மலர்களால் ஆன சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் மன்மதன் சாமியை தேடுவது போன்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சாமி மீது பொம்மை போடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது.

    சித்திரை வசந்த உற்சவத்தின் நிறைவாக வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் இரவு 10 மணியளவில் கோவிலில் கொடிமரம் அருகே மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×