search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் அவதார தின விழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    • அவதார தின விழா பணிவிடையும் அன்னதர்மம் நடைபெற்றது.
    • அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் அய்யா வைகுண்டர் 191-வது அவதார தின விழா நடைபெற்றது.

    இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, காலை 6 மணிக்கு அன்னதர்மமும், பகல் 12 மணிக்கு உச்சபடிப்பு, பணிவிடையும், தொடர்ந்து ஒரு மணிக்கு அன்னதர்மம், மாலை 7 மணிக்கு பணிவிடை, தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் அன்னதர்மம் நடைபெற்றது. இரவு சிவசந்திரன் இன்னிசை கச்சேரியும் தொடர்ந்து பட்டிமன்றம் நடைபெற்றது.

    191-வது அவதார தினமான இன்று அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் காலை 6.50 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அவதார தின விழா பணிவிடையும் அன்னதர்மம் நடைபெற்றது.

    அவதார தின விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவதார தின விழாவையொட்டி இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    விழாவில் சபாநாயகர் அப்பாவு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், சார்பு நீதிபதி வஷித்குமார், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ.ரெட்டியார்பட்டி நாராயணன், அய்யா வழி அகிலத் திருக் குடும்ப மக்கள் சபை இணை தலைவர்கள் கோபால் நாடார், பால்சாமி,விஜயகுமார், ராஜதுரை, இணை செயலாளர்கள் வரதராஜ பெருமாள், ராதா கிருஷ்ணன், செல்வின், தங்க கிருஷ்ணன்,நிர்வாக குழு உறுப்பினர் ஆதிநாரா யணன், மோகன் குமாரராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னு துரை, பொருளாளர் ராமையா நாடார், துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன் மற்றும் இணை தலைவர்கள், இணை செயலாளர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×