search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தீபாவளி அன்று மட்டும் திறக்கும் கோவில்!
    X

    தீபாவளி அன்று மட்டும் திறக்கும் கோவில்!

    • சிவபெருமானுக்கு, `மாத்ரிகேஸ்வரர் மகாதேவ்’ எனப் பெயர்.
    • தீபாவளி பண்டிகையின்போது ஒரு நாள் மட்டுமே திறந்திருக்கும்.

    நேப்பாள் தலைநகர் காத்மாண்டுவின் தொழிற்பேட்டைக்கு அருகில், 400 சதுர மீட்டரில், `ராணி போக்காரி' என்ற ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தின் நடுவில் ஒரு சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த சிவபெருமானுக்கு, `மாத்ரிகேஸ்வரர் மகாதேவ்' எனப் பெயர்.

    இந்த சிவன் கோவில் வருடத்தின் தீபாவளி பண்டிகையின்போது ஒரு நாள் மட்டுமே திறந்திருக்கும். அன்றைய தினம் இந்த ஈசனை தரிசிக்க ஏராளமானோர் வருகை தருகின்றனர்!

    நேப்பாளத்தில் தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதனை திகார் என அழைக்கின்றனர் இந்த ஊர் மக்கள். விழா சமயத்தில் நம் ஊரைப் போலவே வீட்டில் பெரிய பெரிய கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, இனிப்பு, காரம் என பட்சணங்களும் பதார்த்தங்களும் செய்து இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.

    புராண கதையின்படி, ஓய்வறியாது கடமையைச் செய்யும் எமனுக்கு ஐந்து நாட்கள் ஓய்வு தந்து அருளுகின்றார் மகாவிஷ்ணு. அந்த ஓய்வு நாளில் தனது சகோதரி யமுனா வீட்டுக்கு வருகிறான் எமன்! அவனை வரவேற்று, திலகமிட்டு விதவிதமாக விருந்து அளிக்கிறாள் யமுனா! விருந்தில் மகிழ்ந்த எமன், அவளை ஆசீர்வதிப்பதுடன், இன்று இதேபோல் நடந்துகொள்ளும் சகோதர, சகோதரியர் நீண்ட நாட்கள் எமபயம் இல்லாமல் வாழ வரம் தந்துவிட்டுச் செல்கிறான். இப்படியாக, நேப்பாளத்தில் தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் விழாவாக அனுசரிக்கப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையின் ஐந்தாம் நாளான ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும். மாத்ரிகேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். குளத்தின் நடுவில் உள்ள கோவிலுக்குச் செல்ல ஒரு பாலம் கட்டி, அதற்கு அழகாக வெள்ளை வண்ணமும் அடித்துள்ளனர். அதன் வழியாக நடந்து செல்லும்போது, கோவில் வாசலில் வெள்ளை யானை சிற்பம் நம்மை வரவேற்கிறது. சிறிய கோவில் கோபுரம், நேப்பாளத்துக்கே உரிய இரண்டு அடுக்கு மாடத்துடன் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    கருவறையில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு சகோதரி இல்லாத சகோதரர்கள் வந்தால், சகோதரி சார்பாக அவர்களுக்குத் திலகமிட்டு வாழ்த்துகிறார் கோவில் அர்ச்சகர். இதேபோல், சகோதரர் இல்லாத சகோதரிகள் வந்தால், சுவாமியை வழிபட வந்த ஒருவரை அந்தப் பெண்ணுக்கு சகோதரனாக்கி அவனுக்கு திலகமிட்டு அந்தப் பெண்ணை வாழ்த்தச் செய்கிறார்.

    அன்று ஒரு நாள் மட்டும் இந்த கோவிலில் சிறப்பு நைவேத்தியமாக ஏராளமான இனிப்புகள் படைக்கப்படுகின்றன. பூஜைக்குப் பிறகு அவற்றை சகோதர, சகோதரிகளுக்கு வழங்குகிறார் அர்ச்சகர். அன்று இரவே கோவில் நடை சாத்தப்படுகிறது. இனி, அடுத்த வருடம் தீபாவளியின் ஐந்தாவது நாள் மட்டுமே அந்த கோவில்ல் திறக்கப்படும். வாருங்கள் அந்த கோவிக்கு சென்று வருவோம்..

    Next Story
    ×