search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நிறம் மாறும் அதிசய சிவலிங்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நிறம் மாறும் அதிசய சிவலிங்கம்

    • சிவலிங்கத்தை சுற்றி பல அற்புதங்கள் நிகழ்கிறதாம்.
    • ஒரு நாளில் மூன்று முறை சிவன் நிறம் மாறுகிறார்.

    புராணங்களில் சிவனுக்கு பல அவதாரங்கள் இருந்தது குறித்து அறிந்திருப்போம். ராஜஸ்தானில் இருக்கும் சிவன் கோயிலில் இருக்கும் சிவலிங்கத்தை சுற்றி பல அற்புதங்கள் நிகழ்கிறதாம். இங்கு ஒரு நாளில் மூன்று முறை சிவன் நிறம் மாறுகிறார் என்றால் நம்ப முடிகிறதா?

    கோயில் வரலாறு

    தோல்பூர் மாவட்டத்தில் இருக்கும் அச்சலேஸ்வர் கோவில் பல நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு குடிகொண்டிருக்கும் சிவனை மக்கள், அச்சலேஸ்வர் மகாதேவ் என்கிறார்கள். இந்தக் கோவிலில் நந்தி சிலையும் வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள கோவில்களை சுல்தான்கள் தாக்கியபோது, நந்தி சிலை ஆயிரக்கணக்கான தேனீக்களை படையெடுப்பாளர்கள் மீது அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

    அதன் பிறகு படையெடுப்பாளர்கள் கோவிலை உடைக்காமல் திரும்பியுள்ளார்கள். சுமார் 5 வருடங்களுக்கு முன்பாக சிவலிங்கத்தின் ஆழத்தை கண்டறிய தோண்டப்பட்டது. ஆனால் 100 அடிக்கு மேல் தேடியும், சிவலிங்கத்தின் முனையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த காரணத்தால் அகழாய்வு பாதியில் நிறுத்தப்பட்டது.

    நிறம் மாறும் சிவலிங்கம்

    ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அச்சலேஸ்வர் கோவிலில் தான் இந்த அதிசயம் நடக்கிறது. இங்குள்ள சிவலிங்கத்தின் நிறம் ஒரே நாளில் மூன்று முறை மாறுகிறது. சம்பல் ஆற்றின் பள்ளத்தாக்கில் அமைந்து இக்கோயிலில் பக்தர்கள் ஆண்டு முழுவதும் தரிசனம் செய்ய விரைகிறார்கள். சிவலிங்கத்தின் நிறம் மாறுவதை காண விரும்பாத சிவ பக்தர்கள் உண்டா?

    எப்படி?

    இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் வண்ணம் காலையில் சிவப்பாக காட்சியளிக்கிறது. சூரியன் உச்சிக்கு வரும் மதிய வேளையில் காவி நிறமாகவும், மாலையில் கோதுமை நிறத்திலும் மாறுகிறதாம். சிலர் இதனை சிவனருளால் நிகழும் அற்புதம் என நம்புகின்றனர். விஞ்ஞானிகளோ சூரியனின் கதிர்களால் சிவலிங்கத்தின் நிறம் மாறுவதாக கூறிவருகின்றனர்.

    தோல்பூர் மாவட்டத்தில் இருக்கும் இந்தக் கோவிலை அடைவது ஒரு சாகசம் என்று தான் சொல்லவேண்டும். இங்கு செல்ல ஆறுகள் வழியாக பயணிக்க வேண்டும். இந்த ஆறுகளின் ஆழம் அதிகம் கிடையாது என்றாலும், மழைகாலத்தில் சிரமம் தான். இங்கு சென்று வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×