search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருமண பாக்கியம் அருளும் வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில்
    X

    திருமண பாக்கியம் அருளும் வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில்

    • ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில் இதுவாகும்.
    • பாஞ்சராத்ர ஆகம முறைப்படி வழிபாடு நடைபெறுகிறது.

    திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடமதுரை பேரூராட்சியில் அமைந்துள்ளது சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில். சவுந்தரவல்லி தாயார் உடனுறை சவுந்தரராஜ பெருமாள் இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வல்லக்கொண்டம நாயக்கர் மகன் ருத்ரப்ப நாயக்கரால் இந்த கோவிலில் திருப்பணி செய்யப்பட்டதாக கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது. இந்த கோவிலில் ஏராளமான நகைகள் இருந்ததாகவும், அதனை கள்வர்கள் திருடிச் சென்றபோது அதனை திப்பு சுல்தான் மீட்டு தந்ததாகவும் செவிவழிச்செய்தி உலவுகிறது.

    15 அடி உயரத்தில் பழங்கால சுற்றுச்சுவர்கள் கொண்ட சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில் இதுவாகும். இங்கு சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார், கருடாழ்வார், விஷ்ணு, துர்க்கை, விஸ்வக்சேனர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர், ஆண்டாள் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கோவிலில் வாகன மண்டபம், யாகசாலை, மடப்பள்ளி, கொடிக்கம்பம் ஆகியவை தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

    கோவிலின் நுழைவு வாயிலின் உட்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் தீபம் போடும் கம்பமும் அமைந்துள்ளது. இது, தென்கலை கோவிலாகும். பாஞ்சராத்ர ஆகம முறைப்படி வழிபாடு நடைபெறுகிறது. தினமும் 3 கால பூஜை நடைபெற்று வருகிறது. கோவிலுக்கு சொந்தமான கிணற்றில், கோடைக்காலத்தில் கூட தண்ணீர் வற்றாமல் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

    ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பெருமாள் கிணற்றுக்கு சென்று மண்டூக மகரிஷிக்கு வரம் கொடுத்து வருகிறார். ஆடி மாதம் இக்கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கொண்டாடப்படுகிறது. 13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கொடியேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் அனுமார், அன்னம், சிம்மம், கருடன், சேஷம், யானை உள்ளிட்ட வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 7-ம் நாளில் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும்.

    ஆடி பவுர்ணமி நாளில் திருத்தேரோட்ட உற்சவம் உண்டு. குதிரை வாகனத்தில் மின் அலங்காரத்துடன் வீதி உலா மற்றும் முத்து பல்லக்கில் பெருமாள் உற்சவம் நடைபெறும் நாட்களில் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு செல்வர். வேண்டுவோருக்கு வேண்டிய வரம் அருள்பவராக பெருமாள் வீற்றிருக்கிறார்.

    ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு பால் அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபட்டால் கடன் நிவர்த்தி மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். துளசி மாலை அணிவித்து வேண்டினால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    Next Story
    ×