நான் பேசினாலும் பிரச்சனை, பேசவில்லை என்றாலும் பிரச்சனை!- ரஜினிகாந்த்

படத்திற்கு அனிரூத் இசை அமைக்க உள்ளார்.
Rajini
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தலைவர்-173ஆவது படத்தின் பெயர் வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது.

ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்திற்கு "தர்மன்" என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் படத்தின் பெயர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது,

என்னை பேச அழைக்கிறார்கள் என்றாலே தயக்கமாக இருக்கிறது. ஏனென்றால் நான் பேசினாலே பிரச்சினைதான். ஒன்று எனக்கு பிராப்ளம். இல்லை மற்றவர்களுக்கும் பிராப்ளம்.

ஏதாவது கிளப்பிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார்கள். நான் சும்மா இருந்தால் இவர் என்ன பேசவே மாட்டேங்கிறார் என்பார்கள். வாயில் என்ன கொழுக்கட்டை வைத்து இருக்கிறாரா என்று சொல்லி கலாட்டா கிண்டல் செய்வார்கள்.

பேசினால் இப்போது பேசு என்பார்கள். மற்றவர்கள் பேசாமல் உள்ளனர். இவர் பேசியிருக்க கூடாது என்று சொல்வார்கள்.

என்ன பண்றது. ரொம்ப நாள் கழித்து நான் தெரிந்து கொண்டேன். நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் எது பண்ணினாலும் பிடிக்காது. நம்மை பிடிக்கிறவர்களுக்கு நாம் என்ன பண்ணினாலும் எது செய்தாலும் பிடிக்கும் என்று நினைப்பது முட்டாள்தனம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இந்த அலுவலகம் திறப்பு விழாவில் நான் பங்கேற்ற காலத்தில் கமல்ஹாசன் என்னிடம் ரஜினி ராஜ்கமல் பிலிம்சுக்கு ஒரு படம் பண்ணி தரணும் என்றார். நானும் சரி என்றேன். அப்புறம் அவரும் பிஸியாகி விட்டார். நானும் பிஸியாகி விட்டேன். சிவாஜி படத்துக்கு பிறகு அவர் படத்தில் நடிப்பதாக இருந்தது. நடக்கவில்லை.

தர்மன் படத்தை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து நான்காவது டைரக்டர். அதாவது முதலில் கே.எஸ்.ரவிக்குமாரை முடிவு செய்து இருந்தோம். அது சரியாக வரவில்லை என்று அப்படியே நின்றுபோனது. அதன்பிறகு சுந்தர்.சியை முடிவு செய்தோம். சுந்தர்.சிக்கு வேறு ஒரு படம் இருந்ததால் தாமதம் ஆனது. அதனால் அப்புறம் பண்ணிக்கலாம் என்று நான் விலக வேண்டி வந்தது.

அதன்பிறகு இயக்குனர் சிபி.சக்கரவர்த்தியை முடிவு செய்து அவரிடம் கதை கேட்டேன். நன்றாக இருந்தது. ஒரு அணு விஞ்ஞானியை பற்றிய கதை. அணு ஆயுதங்கள் பற்றிது. ஆப்கானிஸ்தான், ரஷ்யா மாதிரி. ஒரு நைஸ் சப்ஜெக்ட். ஆனால் ரொம்ப சென்சிட்டிவ். ரொம்ப ஜாக்கிரதையாக டீல் பண்ணனும். காலமும் அதிகம் எடுக்கும். அதனால் அந்த படத்தை அப்புறம் பண்ணிக்கலாம் என்று சொன்ன நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்துக்குள்ளே வந்தார்.

கமல், நான் கதை எதையும் கேட்க மாட்டேன். உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்கள் என்றார். அது எனக்கு பெரிய டென்ஷனை ஏற்படுத்தியது. அப்படியெல்லாம் சொல்லி எனது தலையில் கட்டி விடாதீர்கள் என்று நிர்ப்பந்தித்து கதையை கேட்க வைத்தேன்.

கதை நன்றாக இருக்கிறது என்றார். அதன்பிற்கு இந்த படத்தை எடுக்க இருக்கிறோம். இந்த படத்தில் எல்லோரும் சேர்ந்து வெற்றியை நோக்கி உழைப்போம். படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அஸ்வத் மாரிமுத்துவின் டிராகன் படம் எனக்கு பிடித்து இருந்தது. அது ரொம்ப கஷ்டமான சப்ஜெக்ட். அதில் நல்ல மெசேஸ் கொடுத்து இருந்தார். கடவுள் புண்ணியத்தில் படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

கமல்ஹாசனுடன் எனக்குள்ள நட்பு குறித்து எவ்வளவு பேசினாலும் அது குறைவாகத்தான் இருக்கும். நிறைய பேருக்கு தெரியாது. 1975 ,76, 77-ல் கமல் மிகப்பெரிய ஸ்டார்.

ராஜ்கமல் தயாரிப்பில் நான் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. படப்பிடிப்பில் அவ்வப்போது கமல் கருத்துக்களையும் புதிய யோசனைகளையும் தெரிவிப்பார். அது மீண்டும் தொடரவேண்டும். கமலோடு எனது நட்பு எப்போதும் நெருக்கமானது. எனக்கு தம்பி போன்றவர் கமல்.

"இளமை ஊஞ்சலாடுகிறது" படத்தில் நான் நடிக்க கமல் தான் காரணம். "ஆடு புலி ஆட்டம்" படத்தில் பைக்கில் போகும் போது தாடியை ஷேவ் பண்ணிட்டு வண்டி ஓட்டினேன். அதற்கும் கமல் இது நல்ல இருக்கு புதிய கெட்டப் என்று புகழ்ந்தார்.

தர்மன் படத்தில் நல்ல ஒரு என்டேர்டெய்ன்மெண்ட் ஓட த்ரில்லரும் உண்டு. படம் நன்றாக இருக்கும். படத்திற்கு அனிரூத் இசை அமைக்க உள்ளார். மேலும் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளது. படக்குழுவினருக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com