

ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் துரந்தர். இப்படம் நல்ல வரவேற்பை பெற அதன் இரண்டாம் பாகமான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' உருவாகி கடந்த 19-ம் தேதி வெளியானது.
இப்படத்தில் மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, டேனிஷ் பாண்டோர், சாரா அர்ஜுன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வசூலை வாரிக்குவித்து வருவதுடன், மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
துரந்தர்-2 படம் தொடர்பாக ரஜினி காந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் "What a film. இப்படத்தில் நடித்துள்ள ரன்வீர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம். ஜெய்ஹிந்த்" எனக் குறிபிட்டுள்ளார்.
இதையடுத்து ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்து துரந்தர் படத்தின் இயக்குநர் ஆதித்யா தார் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "சார், நாங்கள் அனைவரும் 'பொழுதுபோக்கு' என்பதை ஒரே ஒரு அளவுகோலைக் கொண்டே அளந்து வளர்ந்திருக்கிறோம், அது நீங்கள்தான். பல்லாண்டுகளாக எங்களை விசில் அடிக்கவும், சிரிக்கவும், அழவும் வைத்து, வாழ்வையே பெரிதாக உணர வைத்து, இன்றும் அதே கம்பீரத்துடனும் நேர்த்தியுடனும் அதை நீங்கள் செய்வது, ஒரு மாயாஜாலம்.
எனவே, 'துரந்தர் 2' படத்தை 'கண்டிப்பாகப் பார்க்க வேண்டியது' என்று நீங்கள் சொல்வது, என் வாழ்க்கையின் மிகப்பெரிய 'சூப்பர்ஸ்டார்' தருணம் போல் உணர்கிறேன். எங்கள் அனைவரையும் பெரிய கனவுகளைக் காணக் கற்றுக் கொடுத்த அதே நபரிடமிருந்து கிடைத்த ஒரு ஆசீர்வாதம் போல் இது உணர்கிறேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத நன்றி, சார். இது என்னை நெகிழ வைக்கிறது.ஜெய் ஹிந்த்"
இப்படம் வெளியான நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 761 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.550 கோடியும், உலக நாடுகளில் ரூ. 211 கோடியும் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை பட்டியலில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.