சுங்கச்சாவடி ஆண்டுக் கட்டணத்தை 1,500 ரூபாயாக குறைக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
- வருடாந்திர பாஸ் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- ரூ.3000 கட்டணம் செலுத்தினால் நெடுஞ்சாலைகளில் ஆண்டு முழுவதும் இலவசமாக பயணிக்கலாம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்த 'பாஸ்டேக்' முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன்படி, வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், வருடாந்திர பாஸ் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, "ரூ.3000 கட்டணம் செலுத்தினால் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டு முழுவதும் அல்லது 200 பயணங்கள் வரை இலவசமாக பயணிக்கலாம். இந்த பாஸ் முறை கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிக ரீதியான தனியார் வாகனங்களுக்கு மட்டும் தான் பொருந்தும். இந்த வருடாந்திர பாஸ் முறை ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் தனியார் வாகனங்களுக்கு வருடாந்திர FASTag பாஸ் ரூ.3,000 என்பதை ரூ.1,500-ஆக குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனியார் வாகனங்கள் சுங்கச்சாவடியை பயன்படுத்தும் காலம் சொற்பமாக உள்ளதால் இது கூடுதல் தொகையாகும். இந்த ரூ.3,000 கட்டணத்தை வணிக மற்றும் சிறிய சரக்கு வாகனங்களுக்கு நடைமுறைப்படுத்தலாம்" என்று தெரிவித்துள்ளார்.