search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புனேவை வீழ்த்த முழுமையாக தயாராகி உள்ளோம்: கரண் ஷர்மா சொல்கிறார்
    X

    புனேவை வீழ்த்த முழுமையாக தயாராகி உள்ளோம்: கரண் ஷர்மா சொல்கிறார்

    ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் புனே அணியை வீழ்த்துவதற்கு முழுமையாக தயாராகி உள்ளோம் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கரண் சர்மா கூறியுள்ளார்.
    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 107 ரன்னில் சுருண்டது. இதற்கு முக்கிய காரணியாக இருந்தவர் மும்பை அணி சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா. அவர் நான்கு ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சுனில் நரைன், காம்பீர், ஜக்கி, கிராண்ட்ஹோம் ஆகியோரை வீழ்த்தினார். நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஷர்மா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்னார்.

    ஹர்பஜன் சிங்கிற்குப் பதிலாக களம் இறக்கப்பட்ட ஷர்மா தனது திறமையை நிரூபித்துள்ளார். லீக் போட்டியில் புனே அணிக்கெதிராக நாங்கள் பெற்ற தோல்வியானது, நாளை நடக்க இருக்கும் இறுதி ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கரண் ஷர்மா மேலும் கூறுகையில் ‘‘நாங்கள் முழுமையாக தயாராகியுள்ளோம். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவோம். இது உறுதி. புனே அணிக்கு எதிராக நாங்கள் தோல்வியுற்றது கடந்த காலம்.

    ஹர்பஜன் சிங்கை நீக்கிவிட்டு என்னை அணியில் சேர்த்தது எல்லாம், என் கையில் இல்லை. அணிக்கு நான் தேவைப்பட்டேன் என்றால், அந்த நேரத்தில் நான் சிறப்பாக பந்து வீசி, அணியை வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் ஆசை.

    நான் ஆடும் லெவனில் இடம்பிடிக்காத நேரத்தில் கூட கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அணியில் இடம்பிடிக்கும்போது, அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதுதான் என்னுடைய முதன்மையான நோக்கம்’’ என்றார்.
    Next Story
    ×