search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை பெற்ற பிறகு மீண்டும் களம் திரும்புவேன்: செரீனா வில்லியம்ஸ்
    X

    குழந்தை பெற்ற பிறகு மீண்டும் களம் திரும்புவேன்: செரீனா வில்லியம்ஸ்

    ‘குழந்தை பெற்ற பிறகு மீண்டும் களம் திரும்புவேன்’ என்று அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
    நியூயார்க் :

    முன்னணி டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சுக்கும், அமெரிக்க தொழிலதிபர் அலெக்சிஸ் ஒஹானியனுக்கும் கடந்த டிசம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற பிறகு எந்த போட்டியிலும் 35 வயதான செரீனா வில்லியம்ஸ் விளையாடவில்லை.

    இந்த நிலையில் கடந்த வாரத்தில் சமூக வலைதளத்தில் சற்று வயிறு பெருத்து தெரிவது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்ட செரீனா வில்லியம்ஸ் அதன் கீழ் ‘20 வாரங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். சற்று நேரத்தில் அந்த புகைப்படத்தை அவர் நீக்கி விட்டார். பின்னர் அவரது செய்தி தொடர்பாளர் செரீனா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார்.

    கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் வெளியானது குறித்து செரீனா வில்லியம்ஸ் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



    ஒவ்வொரு வாரமும் புகைப்படம் எடுத்து அதனை பாதுகாத்து வைப்பேன். அதேபோல் தான் கர்ப்பமாக இருக்கும் படத்தை எடுத்து தனிப்பட்ட முறையில் வைத்து இருந்தேன். அதனை கவனிக்காமல் சமூக வலைதளத்தில் போட்டு விட்டேன். ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பது எனக்கு தெரியவந்தது. அந்த போட்டியில் எனது 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றேன். அது எளிதான காரியம் அல்ல.

    கர்ப்பமாக இருக்கையில் பெண்கள் சோர்வு அடைவதுடன், அழுத்தத்துக்கு ஆளாவதாகவும் சொல்லப்படும் கதைகளை கேட்டு இருக்கிறேன். ஆனால் நான் எந்தவித சோர்வும் இல்லாமல் வலுவாகவே இருக்கிறேன். எல்லா போட்டிகளையும் போல் தான் ஆஸ்திரேலிய ஓபனையும் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் தான் செயல்பட்டேன். நான் வெல்லாவிட்டால் தான் அது பெரிய செய்தியாகும்.

    இந்த ஆண்டில் எஞ்சிய சீசனில் விளையாடமாட்டேன். ஆனால் குழந்தை பெற்ற பிறகு நிச்சயம் மீண்டும் களம் திரும்புவேன். அது எப்போது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. என்னால் மீண்டும் விளையாட முடியும். 36 வயதாகியும் எனது அக்கா வீனஸ் இன்னும் விளையாடி கொண்டு இருப்பது எனக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. தாயாக இருப்பது எனது வாழ்க்கையில் புதிய அங்கமாகும். வருங்காலத்தில் எனது மகள் கேலரியில் அமர்ந்து என்னுடைய ஆட்டத்துக்கு உற்சாகம் அளிப்பார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×