search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 கிரிக்கெட்டில் இருந்து வங்காள தேச கேப்டன் மோர்தசா ஓய்வு
    X

    டி20 கிரிக்கெட்டில் இருந்து வங்காள தேச கேப்டன் மோர்தசா ஓய்வு

    வங்காள தேச டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் மோர்தசா டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    வங்காள தேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் மஷ்ரஃப் மோர்தசா. தற்போது வங்காள தேச அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற வங்காள தேச அணியின் கேப்டன் மோர்தசா பேட்டிங் தேர்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இதுதான் வங்காள தேச அணிக்காக நான் விளையாடும் கடைசி டி20 கிரிக்கெட் தொடராகும். வங்காள தேச கிரிக்கெட் வாரியம், எனது குடும்பம், நண்பர்கள், அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    அதேபோல் கடந்த 15-16 வருடங்களாக எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறினார்.

    இதனால் மோர்தசா நாளை மறுநாள் நடக்கும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அதுதான் அவரது கடைசி டி20 கிரிக்கெட் போட்டியாகும். அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடுவார்.

    33 வயதாகும் மோர்தசா இதுவரை 52 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 368 ரன்கள் சேர்த்ததுடன், 39 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.
    Next Story
    ×